202 உதவி ஆய்வாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் 3-ம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணிக்கு www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , சீர்மரபினருக்கு 30 வயது,


ஆதிதிராவிடர், அதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர் (பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது,

20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5 வருடங்கள் காவல்துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்) 45 வயது ஆகிய நிபந்தனைகள் உள்ளன.

விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதியாக பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்த 10+2+3 என்ற முறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு 202 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும்,

ஊதிய விகிதம் 36,900 - 1,16,600 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இதற்கான தேர்வு கட்டணம் ரூ.500 ஆகவும்,
  • பொதுப்பிரிவு மற்றும் துறை தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிடி அல்லது இணையவழி மூலம் தேர்வுக் கட்டணமாக செலுத்தலாம் என்றும், தேர்வுமைய விவரங்கள் இக்குழுமம் வழங்கும் நுழைவுச்சீட்டில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இணையதள விண்ணப்ப பதிவேற்றம் துவங்கும் நாள் 29.8.2018,
  • இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.9.2018 என்றும் அறிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர் எழுத்து தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.