அதி புத்திசாலிகளின் எண்ணங்கள்
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.
நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.
குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.
காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.
அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.
0 கருத்துகள்